புவனேஷ்வர்,டிச.17- பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை சோதனை செவ்வாயன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா கூட்டாக இணைந்து நீர்மூழ்கிகள், கப்பல்கள், போர் விமானங்களில் இருந்து எதிரிகளின் இலக்கை நோக்கி செலுத்தும் வகையிலும், நிலத்தில் இருந்து ஏவும் வகையிலும் பிரமோஸ் ஏவுகணையை உருவாக்கியுள்ளன. இதில் நிலத்தில் இருந்து பாய்ந்து சென்று நிலத்திலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சன்டிப்பூரில் உள்ள மூன்றாவது ஏவு தளத்தில் செவ்வாயன்று காலை 8.30 மணியளவில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை, 200 கிலோ வெடிகுண்டுகளுடன், 290 கிலோ மீட்டர் பறந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.